தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-01-17 22:28 GMT
புதுடெல்லி,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொன்மாணிக்கவேல் ஐகோர்ட்டில் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு தமிழக அரசின் மனுவின் மீது பொன்மாணிக்கவேல் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று பொன்மாணிக்கவேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பொன்மாணிக்கவேல் பதில் மனு தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் அளித்து, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்