சொகுசு கப்பலில் போதை விருந்து: பாலிவுட் நடிகர் மகன் உள்பட 8 பேரிடம் விசாரணை

சோதனையின்போது பிடிபட்டவர்களில் பாலிவுட் நடிகரின் மகனும் இருப்பதாக கூறப்படுகிறது

Update: 2021-10-03 05:15 GMT
மும்பை,

மும்பையில் நேற்று இரவு சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். 

பிடிபட்டவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகரின் மகன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் செய்திகள்