மங்களூருவில் தாயை தற்கொலைக்கு தூண்டியதாக 3 மகன்கள் கைது

மங்களூருவில் தாயை தற்கொலைக்கு தூண்டியதாக 3 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-02 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த முல்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ராவ்நகர் கொரந்தபெட்டு காலனியை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 44). இவரது மகன்கள் மஞ்சுநாத் (25), பிரபு (19), சஞ்சீவ் (22). இவர்கள் 3 பேரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது மது குடித்துவிட்டு வந்தனர்.

மேலும் 3 பேரும் குடிபோதையில் தகராறு செய்து வந்தனர். சுமித்ராதான் 3 பேரையும் சமாதானப்படுத்துவார். கடந்த சில நாட்களாக மகன்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போனது. குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் மன வேதனை அடைந்த சுமித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முல்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமித்ராவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் மகன்கள் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறினர். மேலும் உறவினர்களும் 3 மகன்கள் மீது குற்றம் சாட்டினர். இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் முல்கி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் தாயை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்