ரூ.1,500 வட்டி கட்ட தவறியதால் பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்..

பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

Update: 2023-09-25 08:20 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும்  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா எஸ்.யாதவ் கூறியதாவது:

பெண் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரூ.1,500 வட்டி கட்ட தவறியதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த 23-ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

புகாரில் உள்ள அவரது குற்றச்சாட்டுள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இரவு 10 மணியளவில் பம்பிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். சுமார் ஆறு பேர் என்னைப் பிடித்து நிர்வாணமாக்கி பின்னர் கொடூரமாகத் தாக்கினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுநீரை எடுத்து என் வாயில் ஊற்றினார்.

தலையில் காயம் அடைந்த என்னை கட்டையால் தாக்கத் தொடங்கினர். நான் எப்படியோ அந்த இடத்தில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தை அடைந்தேன் என்று அந்த பெண் தனது புகாரில் கூறியதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்