நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.8 சதவீதமாக அதிகரிப்பு
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.;
புதுடெல்லி
அரசின் மொத்த செலவிற்கும், கடன் அல்லாத மொத்த வரவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு வாங்க வேண்டிய கடன் அளவை சுட்டிக்காட்டும் அளவுகோலாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதி ஆண்டிற்கான (2019-20) நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அளவிற்குள் நிதிப்பற்றாக்குறையை கொண்டு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறி வந்தனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2019-20-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனும் இதை சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில், நேற்று அவர் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை இலக்கை 3.8 சதவீதமாக உயர்த்தினார். எதிர்வரும் நிதி ஆண்டிற்கு (2020-21) இந்த இலக்கு 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.39 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டில் (2017-18) அது 3.53 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இது 3.90 சதவீதத்தை எட்டும் என சில மதிப்பீடுகள் தெரிவித்து இருக்கின்றன.
முதல் 9 மாதங்களில்...
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) மத்திய அரசுக்கு ரூ.9.31 லட்சம் கோடி அளவிற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. பட்ஜெட் மதிப்பீட்டில் இது 132.4 சதவீதமாகும்.