இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சென்னை
பிரபல நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் நயன்தாரா தனது பிறந்தநாளை தனது வருங்கால கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. நயன்தாரா தனது பிறந்தநாள் கேக்கை வெட்டும்போது மஞ்சள் நிற டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து அழகாக இருக்கிறார், விக்னேஷ் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்துவதை காணலாம்.
நயன்தாரா மாடலாக ஷோபிஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2003-ம் ஆண்டு சத்யன் அந்திக்காடு டைரக்டு செய்த ‘மனசினக்கர’ என்ற மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் கவுரி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக சினிமாவுக்குள் வந்த இவர், கேரளாவில் திருவல்லா என்ற பகுதியை சேர்ந்தவர். இயற்பெயர் டயனா குரியன். அடுத்த இரண்டு வருடங்களில் ஐயா என்ற படத்தில் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு அவரது திரை உலக வாழ்க்கையில் திரும்பிப்பார்க்க நேரமில்லை. வெற்றி மீது வெற்றிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் எல்லாம் நடித்துவிட்டார்.
‘மனசினக்கர’ சினிமாவை பார்த்துவிட்டு டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி ‘சந்திரமுகி’க்கு கணவரிடம் சிபாரிசு செய்தார். அதில் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நயன்தாராவும் புகழ்பெற்றார். அப்போது தமிழ் ரசிகர்கள் நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லா வரை சென்று அவரது வீட்டை பார்த்துவிட்டு வந்த சம்பவங்களும் உண்டு. அடுத்து சிவாஜி படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்தார். அதில் அவரது நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘கதைபறையும்போள்..’ என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்’கான குசேலனிலும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.
சிம்புவுடன் நடித்த ‘வல்லவன்’ வெளிவந்த பின்பு நயன்தாராவை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. இருவரும் இணைந்திருக்கும் போட்டோக்களும் வெளிவந்தன. பின்பு அதில் கசப்பு ஏற்பட்டுவிட்டது.
பிரபுதேவாவுடன் கொண்ட காதல் ஏகப்பட்ட சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் 2012-ல் ‘பிரபுதேவாவுடனான தொடர்பு முடிந்துபோய்விட்டது’ என்று நயன்தாராவே ரசிகர்களிடம் அறிவித்தார்.
நயன்தாராவின் வேகமான திரை உலக வளர்ச்சியில் 2011 மற்றும் 2012 காலகட்டம் வீழ்ச்சியைகொடுத்தது. கை நிறைய தமிழ் சினிமாக்களோடு வலம்வந்துகொண்டிருந்த அவர், அந்த காலகட்டத்தில் இரண்டு தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார். சோர்ந்தும் காணப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே புதுவேகம் கொண்டு மீண்டுவந்தார்.
2019-ம் வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகின. 2020-ம் வருடத் தொடக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் வெளியானது. அடுத்ததாக ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தார். கடந்த வருடம் நயன்தாராவை மையப்படுத்தி வெளியான மூக்குத்தி அம்மன், ஓடிடியிலும் ஹிட் ஆனது. நெற்றிக்கண் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. அனைவரும் எதிர்பார்க்கும், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுதவிர அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகும் இந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அட்லியின் ராஜாராணி சினிமாவில் நடித்து, சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினையும் பெற்றார். கதாநாயகர்களின் துணை இல்லாமலேயே சூப்பர் ஹிட் படத்தை வழங்கி ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஹீரோயின்' என்ற பெருமையையும் பெற்றார். தமிழ் திரை உலகில் சில நடிகைகளுக்கே சொந்தமான அந்த பட்டம் நயன்தாராவுக்கும் கிடைத்தது. ‘மாயா’ என்ற அமானுஷ்ய படம் அதற்கு துணைபுரிந்தது. இதற்கிடையில் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நட்புறவு ஏற்பட்டது.
‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு சென்ற நயன்தாரா அதில் நிவின் பாலிக்கு ஜோடியானார். அடுத்து விஜய்யுடன் நடித்த பிகில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த ‘சைரா நரசிம்க ரெட்டி’ போன்ற படங்கள் வரிசையாக வெளியாகின.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், கூழாங்கல் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. புதுமுகங்கள் நடித்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இசை - யுவன் சங்கர் ராஜா. கூழாங்கல் படம், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். கடந்த ஜுன் மாதம் இன்ஸ்டகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்போது ரசிகர் ஒருவர், நயன்தாராவை ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை. அதற்காகக் காத்திருக்கிறேன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த விக்னேஷ் சிவன், திருமணத்துக்கு மிகவும் செலவாகும். எனவே திருமணத்துக்காக பணத்தைச் சேமித்து வருகிறேன். கொரோனா முடியவும் காத்திருக்கிறேன் என்றார்.
இன்று அவருக்கு பிறந்த நாள் . பல ஆண்டுகளாக அவர் சினிமாவுக்குள்ளும் வெளியேயும் அவரது பேஷன் தேர்வுகள் அற்புதமானவை . நயன்தாராவின் ஒவ்வொரு தோற்றமும் பேஷன் உலகில் ஒரு டிரெண்டிங்க்கை உருவாக்கியது. இன்று, நயன்தார நடுத்தர வயதை எட்டினாலும் பல ஆண்டுகளாக அவரது அழகு பல பரிணாமங்களை காட்டி உள்ளது.
ஒரு காலத்தில் நயன்தாரா மாடலிங் செய்து கொண்டியிருந்த போது, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது, நயன்தாரா நடு வகிடெடுத்த தலை முடி, மெல்லிய புருவம், பொட்டு வைத்து கொண்டு அம்சமாக இருப்பார். அவரது மாடலிங் காலத்தில் நிறைய நகைகளை அணிந்து கொண்டும், உடல் ஒட்டிய ஆடைகளை அணிந்து கொண்டும், மெருன் கலர் லிப்ஸ்டிக் போட்டும் தனது தோற்றத்துக்கு மெருகூட்டி பார்ப்பவர்களை கிறங்கடித்தார்.
பக்கத்து வீட்டு பெண் போல..
இழுத்து வாரிய கேசம், அவுட் லைன் உதடுகள்
ஹாலிவுட்டின் பிரபல நடிகை கைலி ஜென்னர். இவர் தன்னுடைய உதடுகளை மேலும் அழகாக காட்ட, உதட்டின் மேல், மேலோட்டமான அவுட் லைன் வரைந்து தன்னுடைய உதடுகளை அழகாக காட்டுவது வழக்கம். அதன் பிறகு இந்த டிரண்டை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தவர் நயன்தாராதான். ஜென்னரைப் போலவே தனது உதடுகளையும் அழகாக காட்ட உதடின்மேல் அவுட் லைன் செய்து கொண்டு, சூப்பர் ஸ்டார் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் தன்னுடைய புதிய தோற்றத்தை வெளிக்காட்டினார். சும்மாவே அள்ளும் அழகு அவருக்கு.. அவுட்லைன் போட்டதும், ரசிகர்களின் லைப்லைன் வேற லெவலுக்கு எகிறியது.
கழுத்தைச் சுற்றிய பிளவுஸ், கண்ணைப் பறிக்கும் சேலை
இதுவரை கிராமத்து பெண்ணாகவே நடித்து வந்த நயன்தார சந்திரமுகி படத்திற்கு பிறகு தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘தஸ்கரவீரன்’ படத்தில் நடித்த நயன்தாரா ஸ்டைலான புடவை, ஹால்டர் நெக் பிளவுஸ்களில் மாறுபட்ட பார்டர்கள், ஸ்டைலான காதணிகள், அணிந்து கொண்டு கலக்கியிருப்பார். இந்த ஸ்டைலை ரசிகர்கள் டிரண்டாக்கினார்கள்.
வெள்ளி மூக்குத்தி , வில் புருவம், அலை அலையாய் கேசங்கள்
கஜினி படத்தில் நயன்தாரவின் தோற்றம் மிக கவர்ச்சியாக காட்டப்பட்டது. படத்தில் நயன்தாரா அதிக மார்டன் உடைகளை அணிந்து கொண்டார். இந்த ரசனை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இதில் வரும் நயன்தாராவின் பாடல் ஒன்று மிக கவர்ச்சியாக காட்டப்பட்டது. அதில் அவர் லெதர் கிராப் டாப், ஷார்ட்ஸை அணிந்து இருப்பார். கண்களை மேலும் அழகூட்ட சிறகுகள் கொண்ட ஐலைனர், நீண்ட வளையங்கள், சில்வர் மூக்கு முள் மற்றும் அலை அலையான ஈரமான கூந்தல் தோற்றத்தில் ஜிவ்வென்றிருந்தார்.
நீளமாக இழுத்து வாரிய தலை முடி, ஜிமிக்கி மினுமினுக்கும் சேலை
அடுத்து ‘’ லட்சுமி’’ என்ற தெலுங்கு படத்தில் நயன்தாரா மிகவும் தைரியாமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நீளமாக இழுத்து வாரிய தலை முடியுடன் "கிச்"சென காட்சியளித்தார். இதனை கல்லூரி மாணவிகள் அனைவரும் நயன்தாரவின் ஸ்டைலை காப்பி அடிக்கும் அளவுக்கு அதகளமாக இருந்தது அந்த ஸ்டைல்.
சைடில் வாரி விட்ட தலை முடி, உடலை ஒட்டிய ஆடை
நயன்தாராவின் வாழ்க்கையிலும் சரி, சினிமா துறையிலும் சரி தன்னை எப்பொழுதும் தனித்துவமாகவே காட்டி கொள்வார். தல அஜித் நடித்த ‘’பில்லா’’ படத்த்திற்கு நயன்தாரா தனது உடலை எடையை குறைத்து கொண்டு பிகினி உடை மற்றும் பாடிகான் உடையை அணிந்து கொண்டு நடித்தார். அதிலும், அந்த கருப்பு சன்கிளாஸ்கள் ஒரு டிரெண்ட்செட்டராக மாறியது.
எடுப்பான மூக்குத்தி, வெள்ளி அருவி போல தலை முடி
தூக்கிக் கட்டிய போனிடைல், கலர் அடிச்ச கலக்கல் தலைமுடி
நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு டிரண்டாகவே இருப்பார். 2010க்கு பிறகு அவர் தனது தலைமுடியில் கவனம் செலுத்த தொடங்கினார். ‘பாடிகார்ட்’ படத்தில் வண்ண முடி நீட்டிப்புகள் மற்றும் ஜடைகள் மற்றும் உயர் போனிடெயில் சிகை அலங்காரங்களை செய்திருப்பார். அப்போது, அவர் அணிந்து கொண்ட டெனிம் பேண்ட்டும் டிரெண்டாக மாறியது.