எலும்புப்புரை என்பது என்ன?
நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரணமான பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர்.;
முதிய வயதில், குறிப்பாக பெண்கள் குளியலறை உள்ளிட்ட இடங்களில் வழுக்கி விழுந்து காயம் அடைவது பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.
உண்மை என்னவென்றால், விபத்துகளாக கருதப்படும் இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றுக்கு எலும்புப்புரை நோயே காரணமாக இருக்கலாம். இதை கவனிக்காவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அது ேபான்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படக்கூடும். அதாவது, வழுக்கி விழும்போது தனது உடல் பாரத்தை தாங்கும் அளவுக்கு கூட முதியவர்கள் சிலரது எலும்புகளுக்கு வலு இல்லாததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
பொதுவாகவே மனிதர்களுக்கு குழந்தைப்பருவத்தில் மென்மையாக இருந்து, வயது ஏற ஏற வாலிப வயதில் வலுப்பெற்று, பின் மீண்டும் வயது ஏற ஏற முதுமையில் தன் வலுவை இழந்து, நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் இயல்பை எலும்புகள் கொண்டுள்ளன. அவ்வாறு எலும்புகள் நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் நிலைதான், எலும்புப்புரை ஆகும்.
இந்த நோய் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோய்க்கு ஆளாகியிருப்பதை உடனடியாக உணர முடிவதில்லை.
இது மனிதர்களை பலவீனப்படுத்தும் நோய்களில் முக்கியமானது. இந்த நோய் காரணமாக, முதுமையில், எலும்பு பலவீனம் அடைந்து எலும்பு முறியும் அபாயத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நேரம் இந்த எலும்பு முறிவால் இறப்புகூட நேரிடலாம். இது நாள்பட்ட நிலை என்பதால், இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படலாம்.
முன்கூட்டியே கவனிக்காவிட்டால் இந்த நோய்க்கான சிகிச்சை, பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கான மருத்துவச்செலவு சுமையாக மாறும். பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாத விடாய் நின்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்கு பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.
ஆண்களும் பெண்களும் 30-ம் வயதில், எலும்பு திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்பின் வலிமையை இழக்க தொடங்குகின்றனர். மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்பிருப்பதால், விரைவான எலும்பு வலு இழப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் என மருத்துவதுறையினர் கூறுகின்றனர்.