ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு

நடுக்கடலில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2023-07-21 18:45 GMT

ராமேசுவரம்,

நடுக்கடலில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

15 மீனவர்கள் கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 15 மீனவர்களும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை சிறையில் தவித்த மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

விடுவிப்பு

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்தும், இனி இந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வரக்கூடாது, மீறி மீன்பிடிக்க வந்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நிபந்தனைகள் விதித்து, 15 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த மீனவர்களின் 2 படகுகள் மீதான விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் ஓரிரு நாளில் இந்த மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்