3 அதிரடி நடவடிக்கைகளில் 20½ கிலோ கடத்தல் தங்கம் மீட்பு-12 பேர் கைது

ராமேசுவரம் கடற்கரை மற்றும் சென்னை, கோவை விமான நிலையங்களில் நடந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் 20½ கிலோ கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-01 18:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கடற்கரை மற்றும் சென்னை, கோவை விமான நிலையங்களில் நடந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் 20½ கிலோ கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, போதை பொருட்கள் போன்றவை கடத்தப்படுகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்தும் அவ்வப்போது கடத்தல்காரர்கள் மூலம் தங்கக்கட்டிகள் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் கடத்தி வரப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து ராமேசுவரம் கடல் வழியாக தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 2 படகுகளை, தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அந்த படகுகளில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இதுமட்டுமின்றி கோவை, சென்னை விமான நிலையங்களிலும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து, கடத்தல் தங்கத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் படகில் கடத்தி வந்த 9 கிலோ 63 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த தங்கக்கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியே 37 லட்சம் ஆகும்.

கோவை விமான நிலையம்

நேற்று முன்தினம் ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், 2 பயணிகள் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பிலான 5.17 கிலோ வெளிநாட்டு தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்கள், இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

இதேபோன்று சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் திடீர் சோதனை மேற்கொண்டதில் தங்கம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3.8 கோடி மதிப்பிலான பசை வடிவத்தில் உள்ள 6¼ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ராமேசுவரம் கடற்கரை மற்றும் சென்னை, கோவை விமான நிலையங்களில் மொத்தம் 20½ கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்