கந்துவட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திருமாவளவன் அறிக்கை

கந்துவட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-11-23 17:49 GMT
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நெல்லையில் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய கந்துவட்டி இப்போது சென்னையில் திரைப்படத்துறையைச்சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்திருக்கிறது. கந்துவட்டியைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த கொடுமை தொடர்வதற்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.

கந்துவட்டிக்காரர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் ஆதரவில்லாமல் அந்த தொழிலைச்செய்ய முடியாது. எனவே, கந்துவட்டிக்காரர்கள்–அரசியல்வாதிகள்–காவல்துறை அதிகாரிகள் என்ற கூட்டணியை உடைப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால் அது இந்த மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும். இதை உணர்ந்து காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதல்–அமைச்சர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்