அமெரிக்காவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடங்குகிறது.

Update: 2018-10-16 23:41 GMT
சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறை சார்பில் உலக தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளை கூட்டம் நேற்று நடந்தது. இந்தியக் கிளைத்தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் தலைமை தாங்கினார்.

உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து முன்னிலையில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாடு குறித்து ஒருங்கிணைப்பாளர் உலகநாயகி பழனி எடுத்துக்கூறினார்.

பின்னர் உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்துலகத் தமிழாய்வு மன்றம், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப்பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை அமெரிக்கா நாட்டில் உள்ள சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் செவ்விலக்கியங்கள் குறித்தும் தமிழரின் நாகரிகங்கள் குறித்தும் தமிழரின் இசைக்கலை பண்பாடு குறித்தும் உலகளாவிய நிலையில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பேராசிரியர்கள் உலகநாயகி பழனி, ஒப்பிலா மதிவாணன், ப.மருதநாயகம், அபிதா சபாபதி, அரங்க பாரி, பெ.அர்த்தநாரீஸ்வரன், மருதூர் அரங்கராசன், வ.ஜெயதேவன், ப.மகாலிங்கம், ரவீந்திரநாத் தாகூர், புவனேஸ்வரி, கமலி, இரா.மோகன் மற்றும் நந்தன் மாசிலாமணி ஆகிய 14 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வுக்கட்டுரைகளை தேர்வு செய்ய உள்ளனர்.

ஆய்வுக்கட்டுரைகளின் தலைப்புகளை உலகத்தமிழ் ஆய்வு மன்றம் (ஐ.ஏ.டி.ஆர்) இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 28-ந்தேதிக்கு முன்பாக tenthconference2019@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் ஆய்வாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 50 சொற்களில் தன்விவரக் குறிப்பு, 200 சொற்களுக்குள் கட்டுரைச் சுருக்கம் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான நிர்மலா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி, எழுத்தாளர் மாலன் மற்றும் அருள், பேராசிரியர் ச.விஜயலட்சுமி மற்றும் 14 பேர் கொண்ட குழுவினரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள். 

மேலும் செய்திகள்