பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் : அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-03-11 12:20 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இதில் சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

 இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. 

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி நெஞ்சை உடையச் செய்கிறது. பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது. 

வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போராட்டங்களும் நடக்கிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்