பாஜகவில் இணைந்தது ஏன்? - மதுரை சலூன்கடைக்காரர் மோகன் விளக்கம்

பாஜகவில் இணைந்தது ஏன்? என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-09-09 08:54 GMT
சென்னை,

மதுரையைச் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இவர் தனது மகள் நேத்ராவின் படிப்பு செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில்  கொரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்தார். இவரது செயலை கடந்த மே மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

இதையடுத்து மோகன் குடும்பத்துடன் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை மோகன் மறுத்தார்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு மோகன், மனைவி மற்றும் மகளுடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். அவருக்கு சீனிவாசன் பாஜக உறுப்பினர் கார்டை வழங்கினார்.

இது குறித்து சீனிவாசன் கூறுகையில், மான்கிபாத் நிகழ்ச்சியில் மோகனை பிரதமர் பாராட்டினார். அப்போது அவர் பாஜகவில் இணைய முன்வந்தார். சிலரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜகவில் இணையவில்லை.

இப்போது 300 பேருடன் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலில் உள்ள 6000 பேரை பாஜகவில் இணைக்க அவர் முடிவு செய்துள்ளார்  என்றார்.

மோகன் கூறுகையில், தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தவும், பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும் குடும்பத்துடன் உழைப்போம் என்றார்.

மேலும் செய்திகள்