மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு பஸ்களில் இன்று முதல் இலவச பயணம்

தனித்தனி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு இன்று முதல் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Update: 2021-06-23 02:51 GMT
சென்னை, 

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்கு பிறகு நேற்று முன்தினம் 1,792 பஸ்கள் இயக்கப்பட்டன. 

இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் பயணிகளின் வரவேற்பு நன்றாக இருந்ததால் நேற்று 2 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு பஸ்சில் முககவசம் அணிந்து வரும் 30 பயணிகளை மட்டும் ஏற்றி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாகவும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

குறைந்த பயணிகள் ஏற்றி செல்வதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டாலும், அத்தியாவசிய தேவையாக இருப்பதால் சேவை மனப்பான்மையோடு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகள் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக கட்டணம் எதுவும் வாங்காமல் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு என்று தனித்தனியாக டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்