மின் இணைப்பு வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி....!

உசிலம்பட்டி அருகே விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வங்கிய மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-01 16:30 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் தனது விவசாய தொட்டத்திற்கு மின் இணைப்பு பெற 2010-ம் ஆண்டு விருப்பமனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்து உள்ளது.

இந்த நிலையில்  இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி உத்தப்பநாயக்கணூர் உபமின் நிலையத்திற்கு சசிக்குமார் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் சக்திவேல் மின் இணைப்பு வழங்க சசிக்குமாரிடம் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்த சசிக்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை உதவி பொறியாளர் சக்திவேலிடம் வழங்கி உள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் சக்திவேலை கையும் களவுமாக  கைது செய்தனர்.

மேலும் செய்திகள்