சொத்து தகராறு: அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி கைது..!

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அக்காவை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-03 10:09 GMT
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் (ரமேஷ் 50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி பாஞ்சாலி (58) என்பவர் அருகே உள்ள அழகாபுரியில் வசித்து வருகிறார்.

செவல்பட்டியில் இவர்களுடைய பூர்வீக வீடு உள்ளது. இந்த சொத்தை பிரிப்பதில் அக்காவுக்கும், தம்பிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், தனது சகோதரி பாஞ்சாலியை அரிவாளால் வெட்டி உள்ளார். கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்த பாஞ்சாலி ரத்த வெள்ளத்தில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்