தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-09 18:45 GMT

விழுப்புரம்:

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளபோதிலும் சில கடைகளில் தாராளமாக அதை விற்பனை செய்து வருகின்றனர். விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் நேற்று நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மதன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை அபராதமாக நகராட்சி அதிகாரிகள் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்