15 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,233 மாணவ-மாணவிகள் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த திறனாய்வு தேர்வை 4 ஆயிரத்து 233 மாணவ-மாணவிகள் எழுதினர்.;
ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த திறனாய்வு தேர்வை 4 ஆயிரத்து 233 மாணவ-மாணவிகள் எழுதினர்
திறனாய்வு தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை கண்டறிந்து, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தேர்வை எழுதுவதற்காக 4 ஆயிரத்து 488 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கு ஈரோடு ரெயில்வேகாலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம், மொடக்குறிச்சி, கணபதிபாளையம், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பங்களாப்புதூர், நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, சிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 15 மையங்களில் தேர்வு நடந்தது.
4,233 மாணவ-மாணவிகள்
காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 2-ம் தாள் தேர்வும் நடந்தது. இதில், முதல் தாள் தேர்வை 4 ஆயிரத்து 235 மாணவ-மாணவிகளும், 2-ம் தாள் தேர்வை 4 ஆயிரத்து 233 பேரும் எழுதினர்.
இந்த தேர்வு கொள்குறி அடிப்படையில் நடத்தப்பட்டது. தேர்வை கண்காணிக்கும் பணியில் 320 ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டனர்.