மனைவி இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை
விருத்தாசலம் அருகே மனைவி இறந்த வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மந்தாரக்குப்பம்,
விருத்தாசலம் அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 32). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் வெண்ணிலா குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடந்த மே மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த ராம்ராஜ், சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தனது அக்காள் ராதா வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறிச் சென்ற ராம்ராஜ், அதன் பிறகு தனது அக்காள் ராதாவை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அச்சமடைந்த அவர், பெரியாக்குறிச்சியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ராம்ராஜ் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
தற்கொலை
இதுபற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த ராம்ராஜ் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவி இறந்த வேதனையில் இருந்த ராம்ராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.