தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கடலுக்கு உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-10-05 18:45 GMT

தமிழக கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 30-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது பருவநிலை சாதகமாக மாறி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க உற்சாகத்துடன் சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 189 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதேபோன்று நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 7 மணி முதல் கரைக்கு திரும்ப தொடங்கினர். மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் பிடிபட்டு இருந்தன. இதில் சாளை, விளமீன், கணவாய், பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் இருந்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்