காட்டுயானைகள் வனப்பகுதியில் விரட்டப்பட்டதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2023-07-16 18:45 GMT

கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி அருவி பகுதியில் திடீரென 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன, இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் செல்ல மறுத்து அங்கேயே முகாமிட்டிருந்தன. இதனால் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் நேற்று அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. மேலும் வாரவிடுமுறை என்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே அருவி பகுதியில் மீண்டும் காட்டுயானைகள் புகுந்து விடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்