அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம் - டிடிவி தினகரன் பேட்டி

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-03-31 10:17 GMT

சென்னை,

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதால் தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக்கொண்டு இருக்கிறது. வருங்காலத்தில், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருங்கிணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம். எம்.ஜி.ஆர் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தட்டிக்கேட்கத்தான் அதிமுகவை தொடங்கினார். அப்படிப்பட்ட கட்சியில் ஈபிஎஸ் துரோகத்தின் மூலம் பதவியைப் பெற்றுள்ளார். அதற்கான பதிலை அவர் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. இது நீண்ட நெடிய சட்டப் போராட்டம். இதுவரை 2,3 ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. பண பலம், ஆட்சி அதிகாரம் கையில் இருந்த செல்வாக்கால் அவர் கட்சியை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம். மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும். மத்தியில் ஆள்பவர்கள் நினைத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சேர்த்து வைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்