ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது - வெளியான தகவல்
நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க திட்டமிடப்படிருந்தது.;
சென்னை,
ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3-ந்தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும்.
அந்த மாதத்தின் இதர நாட்கள் மூலம் கிடைக்கும் மொத்த பத்திரப்பதிவு வருமானத்தை விட, அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக முகூர்த்த மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது.
ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.