மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-26 18:45 GMT

வடபொன்பரப்பி, 

மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). இவர்கள் இருவரும் தொழிலாளிகள். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராஜரத்தினம் ஓட்டினார். புதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கினார். இதில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்