போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை மீது வழக்கு

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து இறந்த டிரைவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-28 18:45 GMT

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பெருமாள் (வயது19). டிராக்டர் டிரைவர். இவர் மாரண்டஅள்ளி அருகே எர்ரகுட்ட‌அள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நிலத்தின் வரப்பில் டிராக்டர் ஏறியது. இதில் நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கி பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் வாலிபரின் உடலை எடுத்து வந்து எரித்து விட்டனர். இதுகுறித்து சீரியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்