தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-31 18:45 GMT

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கிராமங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. மேலும் இவற்றுள் சில தோலில் நோயுடன் சுற்றிவருகின்றது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீருக்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேஷ், சூரக்குளம்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்துவிட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பார்களா? செந்தில்முருகன், காரைக்குடி.

எரியாத தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் சில இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்தி, திருப்பத்தூர்.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் ஏரியூர், வடவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதுடன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. மக்களின் நலன்கருதி இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஏரியூர். 

Tags:    

மேலும் செய்திகள்