ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பணிநிரந்தரம் செய்யக்கோரி விழுப்புரத்தில் 6 மாவட்டங்களை சோ்ந்த ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-11-07 18:45 GMT

விழுப்புரம்

காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரம் விஜயராஜ், கடலூர் செந்தில், திருவண்ணாமலை கருணாநிதி, யுவராஜ், கள்ளக்குறிச்சி செந்தில்குமார், பெரம்பலூர் ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோரிக்கைகள்

ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணிக்காலத்தில் உயிரிழந்த கணினி உதவியாளர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, குழு காப்பீடு, வருங்கால வைப்புநிதி சலுகை போன்றவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்