புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2-ம் ஆண்டு கரூர் புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.அப்போது அவர்கூறியதாவது 2-ம் ஆண்டு மாபெரும் கரூர் புத்தக திருவிழா அரசு விழாவாக வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்தாண்டு போலவே இந்தாண்டும் 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட வேண்டும், காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடக்கக்கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணி வரை நற்சிந்தனைகள் கருத்தரங்கம், பட்டிமன்றம், சிந்தனை சொற்பொழிவு உள்ளடக்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் இந்த புத்தக திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பஸ் வசதி, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த மாபெரும் கரூர் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.