பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.;

Update:2023-03-23 00:15 IST

துடியலூர்,

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

பால் உற்பத்தியாளர்கள்

கோவை இடிகரை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இடிகரை சுற்றுவட்டார பகுதிகளான சென்னம நாயக்கன்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது மாடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை கொண்டுவந்து கொடுக்கின்றனர்.

கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பாலை அப்பகுதி பொதுமக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

தரையில் கொட்டி போராட்டம்

இந்த நிலையில் பால் கொள்முதல் விலை கட்டுப்படி ஆவதில்லை. எனவே அதனை உயர்த்தி தரவேண்டும் என்று இடிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் வற்புறுத்தி வந்தனர். இதனை வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் நேற்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்திலங ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவர்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை, கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை. எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.அதில் ஒரு பெண்மணி இவ்வாறு போராட்டம் நடத்தினால் முன்னரே அறிவிக்க வேண்டும். இப்படி போராட்டம் நடத்தினால் பாலுக்கு எங்கு செல்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்