கொல்லிமலை அடிவாரத்தில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி-நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்

Update:2023-03-24 00:15 IST

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அடிவாரத்தில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

கல்லூரி மாணவர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபுராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன். இவருடைய மகன் மாலிக் (வயது 19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாலிக் தனது நண்பர்கள் 7 பேருடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் கொல்லிமலை அடிவார பகுதியில் புளியஞ்சோலை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாலிக் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதனைப்பார்த்து அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாலிக்கை மீட்க முயன்றனர். ஆனால் மாலிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாலிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்