காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி

காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-19 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

காரைக்குடி செக்காலையில் புனித சகாயமாதா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 11-ந்தேதி சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்களில் திருசெபமாலை நிகழ்ச்சியும், நவநாள் திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் திருப்பலி நிகழ்சசிக்கு பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

நேற்று இரவு மின்னொளியில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் மறையுரையாற்றினார். அதன் பின்னர் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று மின்னொளியில் சகாய அன்னை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பலி

இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி 100 அடி சாலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, செக்காலை ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்ச்சி சிவகங்கை மறைமாவட்ட பரிபாலகர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது. பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர், கார்மேல் சபை அருட்சகோதரிகள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்