மகன் கண் எதிரே பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.

Update: 2023-06-17 18:45 GMT

கண்டமங்கலம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சித்திரை சாவடி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி மாலா (வயது 48). இவர் நேற்று காலை பண்ருட்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக தன் மகன் முரளியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் லேசாக உரசியது. இதனால், மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் பின்னால் அமர்ந்திருந்த மாலா சாலையில் விழுந்தார். அப்போது திடீரென லாரியின் சக்கரம் மாலாவின் தலையில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாலா தலை நசுங்கி உயிரிழந்தார். மகன் முரளி படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாலா உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன் கண் முன்னே தாய் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்