கடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை திடீர் சாவு போலீசார் விசாரணை

கடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத ஆண் குழந்தை திடீரென இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-13 18:45 GMT

ரெட்டிச்சாவடி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 37) விவசாயி. இவரது மனைவி காந்திபிரியா. இவர்களுக்கு தஸ்விக்ராஜ் என்கிற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

காந்திபிரியா தனது குழந்தையுடன் அழகியநத்தத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போட தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காந்திபிரியா சென்றார். அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து குழந்தையை காந்திபிரியா வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

இந்த நிலையில் இரவு குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது குழந்தையை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், தஸ்விக்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டதால் திடீரென உடல் நிலைபாதிக்கப்பட்டு குழந்தை இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குழந்தை இறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்