பரமத்திவேலூர் பகுதியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பகுதியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி;

Update:2022-10-11 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் திரள தொடங்கின. இதையடுத்து இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பரமத்திவேலூர் பகுதியில் 115 மில்லி மீட்டர் அளவில் மழை ெகாட்டியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வாரச்சந்தையில் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் கனமழை காரணமாக சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலம் உணவு மற்றும் பழங்கள் விற்பனை செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாரச்சந்தைக்கு காய்கறி, கீரைகள் மற்றும் பழங்களை பொதுமக்கள் ‌‌‌‌‌வாங்க வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் திடீர் கனமழையால் வாழை, வெற்றிலை, மஞ்சள், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்