நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வானிலை
இன்று 12 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 28-ந் தேதி 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 8 கி.மீட்டர் வேகத்திலும், நாளை 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 70, 80, 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 40, 30, 30, 30 சதவீதமாகவும் இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
கடந்த வாரம் இறந்த கோழிகள் வெப்ப அயிற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துஉள்ளது.
எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். அதோடு கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். மேலும் தீவனத்தில் வைட்டமின்-சி, நுண்ணூட்ட கலவை மற்றும் பீட்டைனை உபயோகிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.