சிலம்பம், கபடி போட்டிகளில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவி வர்ஷா சாதனை

சிலம்பம், கபடி போட்டிகளில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவி வர்ஷா சாதனை படைத்தது வருகிறார்.

Update: 2022-12-13 19:22 GMT

தஞ்சையை அடுத்த வல்லத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி உஷா. ரவி, மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் ர.வர்ஷா (வயது20). தஞ்சை மன்னர் சரபோஜி கலை கல்லூரியில் வணிக நிர்வாகவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தேசிய மற்றும் மாநில அளவிலான சிலம்பம், கபடி போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் மாணவி வர்ஷா பங்கேற்று முதலிடம் பிடித்தார். கடந்த மாதம் (நவம்பர்) கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப ேபாட்டியில் முதலிடம் பிடித்தார். இதில் கள்ளக்குறிச்சியில் நடந்த போட்டியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா 2-ம் இடம் பிடித்தார். கடந்த அக்டோபர் மாதம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியிலும், கடந்த மாதம் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியிலும் வர்ஷா தலைமையிலான அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. விளையாட்டு மட்டுமல்லாமல் நடன போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மற்றும் மாநில அளவிலான சிலம்பம், கபடி போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாணவி வர்ஷாவை, விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்