சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததில் இருதரப்பினர் மோதல் 8 பேர் கைது

சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததில் இருதரப்பினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-22 20:00 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததில் இருதரப்பினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

சோழவந்தான் அருகே கீழ்நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 26). திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு(27). இவர்கள் 2 பேரும் சோழவந்தான் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்றனர். வெளியூரை சேர்ந்த வல்லரசு இந்த பகுதிக்கு வந்து கஞ்சா விற்க கூடாது என பிரகாஷ் கூறினார். இதனால் கஞ்சா விற்பது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.

இருதரப்பினர் மோதல்

இந்த நிலையில் சம்பவத்தன்று கீழ்நாச்சிக்குளம் அருகே சாலாச்சிபுரம் ரெயில்வே பாலம் அருகே பிரகாஷ் தனது ஆட்களுடன் நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தார். அங்கு வந்த வல்லரசு தனது ஆதரவாளர்களுடன் வந்து உள்ளார். அப்போது பிரகாஷ், வெளியூர்காரன் இங்கு வந்து கஞ்சா விற்க கூடாது என கூறி உள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது தகராறில் வல்லரசு தரப்பை சேர்ந்தவர்கள், பிரகாசுக்கு உறவினரான காரியாபட்டி தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த மார்க்கண்டயனை அரிவாளால் வெட்டி உள்ளனர். மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலையும் வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த மார்க்கண்டயன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

8 பேர் கைது

இது தொடர்பாக 3 பள்ளி மாணவர்கள் உள்பட கீழ்நாச்சிகுளம் ஜான்டேவிட்(26), விஜய்(27), அபிஷேக்(20), முனியாண்டி(20), அய்யனார்(20)உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்