சித்திரை மாத சஷ்டியையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல்:
சித்திரை மாத சஷ்டியையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி
சித்திரை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி மல்லசமுத்திரம் அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது.
பின்னர் சாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையையொட்டி கோவில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி கோவிலை சுற்றி உலா வந்தார்.
பாலதண்டாயுதபாணி
சித்திரை மாத சஷ்டியையொட்டி நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் மற்றும் 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் நாமக்கல் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி, பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயர ஆறுமுக கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், பச்சமலை முருகன், அணிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், ராஜா சுவாமி, நல்லியாம்பாளையம் சுப்பிரமணியர் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.