ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் கட்டுமான பணிகள் தீவிரம்;
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேனுபுரீஸ்வரர் கோவில்
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, ஸ்வர்ண விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், நடராஜர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், சண்முகர் ஆகிய 6 முகங்கள் கொண்ட சண்முகர், சுப்பிரமணியர், துணைவியருடன் சுப்பிரமணியர், சப்தமதாஸ், நவக்கிரகம், மூவர், 63 நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகள், ராமர், பைரவர், திருஞானசம்பந்தர், மாதவரணப்பிள்ளையார், மகாலிங்கம், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், சூரியன், ரேணுகாதேவி, கீர்த்திவாசர், வேதலிங்கம் மற்றும் தண்டபாணி ஆகிய சாமிகள் உள்ளன.
மேலும் கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளும் உள்ளன.
புதிய தேர் வடிவமைக்க கோரிக்கை
இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் நடைபெறும். ஆனால், கோவிலுக்கு தேர் இல்லாததால் அந்த உற்சவத்தின் போது கட்டுத்தேரைக்கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். தொடர்ந்து, புதிய தேர் வடிவமைக்க பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
48 அடி உயரத்தில் வடிவமைப்பு
அதன்படி தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேர்கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், இந்த கோவிலுக்கு இலுப்பை மரத்தினால் வடிவமைக்கப்படும் புதிய தேர், கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரமும், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
இந்த தேரின் எடை சுமார் 52 டன் ஆகும். 17 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 22 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது.
விரைவில் தேேராட்டம்
இந்த தேர்கட்டுமான பணியை செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த ஸ்தபதி திருமுருகன் குழுவினர் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 10 பேர் வீதம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேருக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் தேரோட்டத்திற்கு தயாராகிவிடும் என்றனர்.