மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

ஆலங்குளம் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். மற்றொரு விவசாயியை காப்பாற்ற சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.;

Update:2023-03-22 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். மற்றொரு விவசாயியை காப்பாற்ற சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விவசாயி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் நெல், கத்தரிக்காய் போன்ற பயிர்களை காட்டுப்பன்றி, மான்கள் நாசம் செய்வதை தடுப்பதற்காக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. தினமும் இரவில் மின் இணைப்பை கொடுத்துவிட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம்.

மின்வேலியில் சிக்கி பலி

அதன்படி, நேற்று காலையில் மின் இணைப்பை துண்டிப்பதற்காக கனகராஜ் சென்றார். அப்போது, வரப்பில் நடந்து சென்று கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி மின்வேலியில் விழுந்து கதறினார்.

அப்போது, பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயியான அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் (37) காப்பாற்றுவதற்கு அவசரமாக வந்தார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே, மின்வேலியில் சிக்கிய கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், பலியான முத்துராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பம்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த முத்துராஜிக்கு கோமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலங்குளம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்