பயணிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது; பெண் பலி

பயணிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது; பெண் பலி

Update: 2023-02-12 15:25 GMT

சேவூர்,

அவினாசி அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது.இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ்சுக்காக காத்து நின்றனர்

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாப்பாத்தி (வயது 51). இவர் திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊர் செல்ல தண்டுக்காரன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். மேலும் அதே பஸ் நிறுத்தத்தில் தண்டுக்காரன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த காளியம்மாள் (60), அதே ஊரை சேர்ந்த மஞ்சுளா (38) மற்றும் சின்னகானூர் பகுதியை சேர்ந்த ரங்கன் (52) ஆகிேயார் புளியம்பட்டி செல்ல பஸ்சுக்காக காத்து நின்றனர்.

அப்போது சக்தி-திருப்பூர் சாலையில் திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரில் திருப்பூரைச் சேர்ந்த கணேஷ்பிரதீப், அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர். காரை கணேஷ் பிரதீப் ஓட்டினார். இவர் தனது குழந்தைகளுக்கு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.

இவருடைய கார் தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரும் போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதன்பின்னரும் அந்த கார் நிற்காமல் பஸ்சுக்காக காத்து நின்ற பாப்பாத்தி, காளியம்மாள், மஞ்சுளா மற்றும் ரங்கன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியதோடு அங்கிருந்த மின் கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்தில் பலியானார்.

5 பேர் காயம்

காளியம்மாள், மஞ்சுளா, ரங்கன் ஆகியோரும், காரில் இருந்த கணேஷ்பிரதீப்பின் 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 2 மோட்டார்சைக்கிள்களும், காரின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-----

விபத்துக்கான கார் மின் கம்பத்தில் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

--

பாப்பாத்தி

Tags:    

மேலும் செய்திகள்