வியாபாரி மனைவியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்

வியாபாரி மனைவியின் ஆபாச படத்தை காண்பித்து, பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-05 18:45 GMT

கோவை

வியாபாரி மனைவியின் ஆபாச படத்தை காண்பித்து, பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலையில் இருந்து நீக்கினர்

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவுக்கார வாலிபர் உள்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர்.

உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் வாலிபர் ஆத்திரத்துடன் இருந்தார்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்தநிலையில் வியாபாரியின் செல்போனுக்கு வாலிபர் சில ஆபாச படங்களை அனுப்பினார். உறவினர் என்பதால் கடையில் வேலை பார்த்த போது வியாபாரியின் வீட்டுக்கு அவர் சென்று வந்துள்ளார். அப்போது வியாபாரியின் மனைவிக்கு தெரியாமல் அவரை வாலிபர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித் துள்ளார்.

அந்த ஆபாச படங்கள் தான் வியாபாரியின் செல்போனுக்கு வந்திருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரி, வாலிபரை  கண்டித்தார்.

அதற்கு அந்த வாலிபர் இந்த படங்கள சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருக்க வேண்டுமானால் எனக்கு ரூ.2½ லட்சம் தர வேண்டும். இல்லா விட்டால் சமூகவலைதளங்களில் போட்டு குடும்ப மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

வழக்குப் பதிவு

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வியாபாரி நேராக ராமநாதபுரம் போலீஸ்நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரங்களை கூறி வாலிபர் தன்னை மிரட்டுவது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்