ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் சாவு

களக்காட்டில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-14 19:00 GMT

களக்காடு:

களக்காட்டில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ மீது லாரி மோதல்

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் தேவஈவு சாமுவேல் (வயது 55). இவர் தற்போது களக்காடு நடுத்தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இவரும், இவரது சகோதரியான சீமோன் மனைவி எப்சி (60) என்பவரும் ஒரு ஆட்டோவில் நாங்குநேரி சென்று விட்டு, களக்காட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை மூங்கிலடி பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த டிரைவர் அதலி மகன் ரபீக் (48) ஓட்டி வந்தார்.

களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள பாட்டாபிள்ளை மதகு அருகே வந்தபோது எதிரே நாங்குநேரி நோக்கி சென்ற லாரி, திடீர் என ஆட்டோ மீது பயங்கரமாக மோதி, சாலையில் சென்று கொண்டிருந்த மொபட்டையும் இடித்து தள்ளியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ரபீக், தேவஈவு சாமுவேல், எப்சி ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.

டிரைவர் சாவு

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆட்டோ டிரைவர் ரபீக் உயிரிழந்தார். தேவஈவு சாமுவேல், எப்சி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

விபத்தில் பலியான ஆட்டோ டிரைவர் ரபீக் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்