"தமிழகத்தில், தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Update: 2021-03-25 05:24 GMT
மதுரை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர்; அதிமுக வேட்பாளர் அமைதியானவர், பண்பானவர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் நீர்நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கின்றன. ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் இந்தியாவிற்கே முன் உதாரணமாக உள்ளது.

 சட்டம்,ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது . தமிழகத்தில் மறுபடியும் திமுக ஆட்சி வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகும். திமுகவினர் அபகரித்த சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசுதான் 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்