புதுக்கோட்டை அருகே ரூ.3.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை
தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிரடி நடவடிக்கையில் புதுக்கோட்டை அருகே ரூ.3.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். இதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கேப்பரை என்ற இடத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.3.17 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அவற்றை பறிமுதல் செய்துள்ளது.