"அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்" - திருமாவளவன் டுவீட்

திமுக தலைவர் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் ''அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்'' என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-02 06:53 GMT
சென்னை,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசனின் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திமுக கட்சிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமானவரித்துறையினர் நடத்திவரும் சோதனைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனைக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பழிவாங்கல்: திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித்துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு. இத்தகைய அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக்கொண்டு தான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்