கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

ஆஸ்திரேலியா கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பதற்றம் நிலவியது.

Update: 2024-04-26 05:25 GMT

கான்பெரா,

டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவையாக பைலட் திமிங்கலங்கள் கருதப்படுகின்றன. பொதுவாக கூட்டம் கூட்டமாக வாழும் தன்மையை கொண்ட இந்த ராட்சத பாலூட்டி இனங்களை ஆழ்கடலிலேயே காணமுடியும்.

அவை குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து அந்த கூட்டத்தை சேர்ந்த மற்ற திமிங்கலங்களும் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும். அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இந்த வகை திமிங்கலங்கள் கருதப்படுகிறது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தின் கடற்கரை நகரமான டன்ஸ்பாராக்கில் நேற்று கூட்டம் கூட்டமாக பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அங்குள்ள ஊடகங்களும் செய்தி ஒளிபரப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு வனவிலங்குநல ஆர்வலர்கள், கடல்சார் உயிரியலாளர்கள் ஆகியோர் விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கரையில் 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. அவற்றில் பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததும் தெரிந்தது.

இதனால் திமிங்கலங்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் வன ஆர்வலர்களுடன் பொதுமக்கள் தீவிரம் காட்டினர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு மூலம் ஆழ்கடலுக்கு இழுத்து சென்று விடப்பட்டது. ஏற்கனவே இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்த 26-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் அங்குள்ள மணல்பரப்பில் தோண்டி புதைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்