பாகிஸ்தானின் 14-வது அதிபர்.. ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாக பதவியேற்பு

ஆசிப் அலி சர்தாரியின் பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது

Update: 2024-03-10 22:48 GMT

Image Courtacy: PTI

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் கடும் அமளிக்கிடையே நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே அதிபர் ஆரிப் ஆல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் அங்கு அதிபர் தேர்தலும் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி 411 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அச்சக்சாய் 181 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன்மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அவரது பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது நாட்டின் 14-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி பேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்