உலக அழிவை கணக்கிடும் 'டூம்ஸ்டே கடிகாரம்' - 90 வினாடிகள் மட்டுமே மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.;
Image Courtesy : @BulletinAtomic twitter
வாஷிங்டன்,
கடந்த 1947-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் 'டூம்ஸ்டே கடிகாரம்' உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர்.
அதன்படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை. உலக அழிவிற்கான அபாயம் இருக்கும் சமயத்தில் இந்த கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு அருகில் கொண்டு செல்லப்படும். இதற்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டு இந்த கடிகாரம் 12 மணி ஆக 3 நிமிடத்தில் இருந்தது.
இந்நிலையில் ரஷியா-உக்ரைன் போர், பருவநிலை நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் தற்போது இந்த கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லது அல்ல என்றும், அனைத்து நாடுகளும் இதை உணர்ந்து மனித குளத்தின் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.