பாகிஸ்தானில் ஆப்கானிய அகதிகள் வெளியேற காலக்கெடு நீட்டிப்பு
சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தது. இதற்கு தலீபான்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.;
Photo Credit:AFP
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர். இதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 17 லட்சமாக உயர்ந்தது. இந்தநிலையில் சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தலீபான்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள பதிவு செய்யப்படாத அகதிகள் அனைவரும் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டது. இதனால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான அகதிகள் வெளியேறினர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குடியேறுவதற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு டிசம்பர் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
எனினும் அதற்கான ஏற்பாடுகள் இன்னும் முடியாததால் இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாசை சந்தித்து வலியுறுத்தினார். அதன்பேரில் மேலைநாடுகள் செல்ல காத்திருக்கும் அகதிகளுக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 29 வரை நீட்டித்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.